வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தாய் தந்தையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்றதன் பின்னர் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் காவல்துறையினர் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது அப்பகுதியில உள்ள மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இரவு 7.30 மணியளவில் சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
காட்டிக்கொடுத்த மோப்ப நாய்
உறவினர்களால் நெளுக்குளம் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர், வவுனியா மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர், வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது கிணற்றிலிருந்து 50மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டதுடன், மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தை சென்றடைந்தது.
சடலம் மீட்பு
அங்கு சோதனையிட்ட போதுபாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறும் காணப்பட்டுள்ளது. அதன் பின்னர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இரவு 11.45 மணியளவில் கிணற்றில் காணப்பட்ட சிறுமியின் சடலத்தினை மீட்டெடுக்கும் பணியில் தடயவியல் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்திருந்ததுடன் பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலத்தினை கிணற்றிலிருந்து மேலே எடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் பாரியளவில் குவிக்கப்பட்டமையினால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலமை காணப்பட்டதுடன் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் மரண விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினருடன் இணைந்து தடயவியல் காவல்துறையினரும் முன்னெடுத்துள்ளனர்.
THANKS TO : IBC TAMIL