தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானதொல்.
திருமாவளவன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
கடந்த 5 ஆம் தேதி தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை; உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை தடுக்கத் தவறினால் தமிழ்நாடு அரசுக்கு மேலும் களங்கம் ஏற்படும் என்று திருமாவளவன் வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானதொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். நீட் தேர்வு ரத்து, குற்றவியல் சட்டங்களை சீரமைக்க கோரிக்கை, தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு தொடர்பாகவும் முதலமைச்சரிடம் திருமாவளவன் மனு அளித்தார்.
சென்னை : தமிழகத்திற்கு இம்மாதம் இறுதிவரை நாள்தோறும், 1 டி.எம்.சி., நீர் திறக்கும்படி, கர்நாடகாவிற்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி., நீரில், 2.25 டி.எம்.சி., மட்டுமே கிடைத்தது.இம்மாதம், 31.2 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டிய நிலையில், 9ம் தேதி வரை, 1.99 டி.எம்.சி., மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, நடப்பாண்டு நிலுவை நீரின் அளவு, 14 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடந்தது. வினீத் குப்தா தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில், காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் பங்கேற்றனர்.’மேட்டூர் அணையில், 12.9 டி.எம்.சி., மட்டுமே நீர் உள்ளது. இதிலிருந்து குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் அணை வறண்டு விடும் கட்டத்தில் உள்ளது. எனவே, குடிநீர் தேவைக்காக, நிலுவை நீரை விடுவிக்க வேண்டும்’ என, தயாளகுமார் வலியுறுத்தினார். அதை பரிசீலித்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைவர், தமிழகத்திற்கு இம்மாதம் இறுதி வரை நாள்தோறும், 1 டி.எம்.சி., நீர் திறக்க உத்தரவிட்டார்.
அமைச்சர்உதயநிதி : அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வரும் நவ.10 முதல்17-ம் தேதி வரை உலக கேரம் போட்டி நடைபெற உள்ளது, இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் கே.நாகஜோதி, எம்.காசிமா, வி.மித்ரா ஆகிய 3 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இவர்களுடன் பயிற்றுநர் மரியா இருதயம் செல்கிறார். இவர்களுக்கான செலவின தொகையாக தலா ரூ.1.50லட்சத்துக்கான காசோலையை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
அதேபோல், நியூசிலாந்தில் ஜூலை 16 முதல் 19-ம் தேதிவரை நடைபெற உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் ஜாய்ஸ் அஷிதா பங்கேற்கஉள்ளார். அவருக்கு தேவைப்படும் செலவின தொகை ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் அமைச்சர் உதயநிதி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில், விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:-
எல்லா வழக்குகளையும் பார்த்தவன்.
மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். எல்லோரையும் மிரட்டுவதுபோல என்னையும் அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். எனது வழக்கின் தன்மை பற்றி அவருக்கு தெரியவில்லை. எங்கள் மீது வழக்கு பதிவு செய்தபோது ‘நீங்கள் சாதாரண நகர காவல்துறை, இதற்கு மேல் உயர் அதிகாரிகள், சிபிசிஐடி, சிபிஐ வலுவான அமைப்புகள் இருக்கிறது’ என சொல்லி வழக்கை சந்தித்தோம். அந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றும்படி உயர் நீதிமன்றத்தில் அப்போதைய மூத்த வழக்கறிஞராக இருந்த எனது வழக்கறிஞர் சந்துருதான் வாதாடினார். உடனே நகர காவல்துறை சிபிஐ விசாரிக்க தேவையில்லை. நாங்களே வழக்கை வாபஸ்பெற்றுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் நீதிமன்றமே இந்த வழக்கை ரத்து செய்யலாம் என்று தெரிவித்தனர்.
அந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை அண்ணாமலை படிக்க வேண்டும். இந்தியாவில் எங்கும் இதுபோல நடந்ததில்லை. வழக்கு போட்டது காவல்துறை. யார் மீது வழக்குப் பதியப்பட்டதோ அவரே சிபிஐ விசாரிக்கட்டும் என தெரிவித்தார். அவ்வாறு கூறியதும் வழக்கை காவல்துறை திரும்பப்பெற்றது. இந்த வழக்கின் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை இதில் பதிவிடுகிறேன். அதை படித்து உண்மையை தெரிந்து கொண்டு அண்ணாமலையிடம் நண்பர்கள் கேளுங்கள். இவ்வாறு வீடியோவில் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
நேபாளம்: நேபாளத்தில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், காத்மாண்டு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முகிலிங்-நாராயண்காட் நெடுஞ்சாலையில் சிட்வான் மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன.
ஒரு பேருந்து 24 பயணிகளுடன் பிர்கஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தது, மற்றொன்று 41 பயணிகளுடன் காத்மாண்டுவில் இருந்து ரவுதஹாட் மாவட்டத்தில் உள்ள கவுருக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளும் நேபாளத்தின் மடன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயணித்து கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 63 பேருடன் சென்ற இரண்டு பேருந்துகள் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். திரிசுலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளில் சென்ற மற்றவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட 11 பேரை காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் எவ்வளவு பணம் கைமாறியது என்பது குறித்தும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 நாள் காவலில் எடுக்கப்பட்டுள்ள 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு பாடம் கற்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.07.2024) தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
பெரிய பெரிய திட்டங்களை, மாவட்டத்திற்கு தேவையானவற்றை திட்டமிட்டு செய்து தருகிறோம். பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டு, செயல்படுத்தி கொடுப்பது மூலமாக, எல்லோரும் மனநிறைவு அடையும் ஆட்சியாக நம்முடைய திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஏதாவது ஒரு பயன்கிடைக்க அதில் அவர்கள் பயனடைந்து கொண்டு வருகிறார்கள்.
அதேபோன்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலமாக ‘யாருக்கும் எந்தக் குறையும் இல்லை’ என்ற நிலையை உருவாக்க நாங்கள் இப்போது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.
வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம்! ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை! தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை! தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை! நல்ல குணமில்லை! பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை! தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை.
மத்திய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சேலம் : ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் முதல்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமலுக்கு வந்தது. அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடைபெற்ற விழாவில் இந்த திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த திட்டத்தின் மூலம் அரசின் பல்வேறு சேவைகளையும் ஒரே குடையின் கீழ் மிக எளிதாகப் பெற முடியும் என்பதை அவர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, ரூ.445 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ரூ.56 கோடி மதிப்பில் 2,637 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கென 20 பிரத்யேக பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
சென்னை:செல்வப்பெருந்தகையை ரௌடிகள் பட்டியலில் இருந்தவர் என அண்ணாமலை பேசிய விவகாரம் பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், செல்வப்பெருந்தகை புகாரில் போலீசார் அண்ணாமலையை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
இதனால் அண்ணாமலை லண்டன் செல்வதிலும் சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் கட்சித் தலைவர்களை மிரட்டி வருவதாக கூறியதோடு, பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியல் மற்றும் அவர்கள் மீது உள்ள வழக்கு விவரங்களை வெளியிட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை செல்வப்பெருந்தகையே குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் தான் எனக் கூறி இருந்தார்.
அதற்கு செல்வப்பெருந்தகை கடுமையாக எதிர்வினை ஆற்றினார். எனது பெயர் குற்றப் பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பேசினால் என்ன வழக்கு வரும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா?
என்னை ரவுடி எனக் கூறும் அண்ணாமலை எந்த காவல்நிலையில் என்ன வழக்கு என் மீது உள்ளது என நிரூபிக்க முடியாமா? என்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இது கடைசி எச்சரிக்கை. மன்னிப்புக் கேட்காவிட்டால், அவதூறு வழக்கும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்” என்று எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் குறித்த பட்டியலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் அண்ணாமலை. 2003 வழக்கு எண் 451/2003 இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் செல்வப்பெருந்தகை என அண்ணாமலை தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலை – செல்வப்பெருந்தகை இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து வருவது தமிழக அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், செல்வப்பெருந்தகையிடம் இருந்து, தமிழக காவல்துறை புகார் ஒன்றை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடர்வேன் என செல்வப்பெருந்தகை எச்சரித்த நிலையில், அண்ணாமலை, மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், அண்ணாமலை மீது செல்வப்பெருந்தகை போலீசில் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது.
செல்வப்பெருந்தகையின் புகாரின் பேரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் சென்று அங்கு 6 மாதங்கள் தங்கி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிக்க இருக்கிறார். இந்நிலையில், செல்வப்பெருந்தகை விவகாரத்தில் அண்ணாமலை கைது செய்யப்பட்டால் அவர் லண்டன் செல்வதிலும் பெரிய சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமும் தெரியாது- அரசியல் முதிர்சியும் கிடையாது. பாரதிய ஜனதாவுக்கு கைகட்டி சேவகம் செய்து கிடைத்த பதவியில் வாழ்பவர் என கரூர் எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டு.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக கரூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் வழங்கினர். அதனை தொடர்ந்து ஜோதிமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமும் அரசியல் முதிர்ச்சியோ கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உட்பட எல்லோர் மீதும் சேற்றை வாரி இறைப்பது அவருடைய அரசியல். மக்களுக்கான பிரச்சினைகளுக்கு முன்பு நிற்பது கிடையாது. அண்ணாமலைக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பாரதிய ஜனதாவுக்கு கைகட்டி சேவகம் செய்து தனது காவல்துறை பதவியை துஸ்பிரோகம் செய்து ஒரு நேர்மையற்ற காவல்துறை அதிகாரியாக இருந்தவர்தான் இந்த அண்ணாமலை.
அதனால் தான் அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த ஒரே வருடத்தில் மாநில தலைவரானார். யாத்திரை என்று ஒன்று நடத்தி மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி உள்ளார். லுலு மால் போன்ற நிறுவனங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு பின்னர் அமைதி காப்பது ஏன். இடையில் கமிஷன் பெற்று விட்டாரா.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயகர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. அவர் ஏற்கனவே அமைச்சராக இருந்த பொழுது 300 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என முன்பே அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. தான் கைது செய்யப்படுவோம் என உணர்ந்து ஒரு மாத காலமாக தலைமுறைவாக உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தமிழக கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.
ஆனால் எம்.ஆர்.விஜயகரின் ஒரே ஒரு கோப்பை மட்டும் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. அதுக்கு காரணம் அண்ணாமலை தான் என நான் பல தடவை குற்றம் சாட்டி உள்ளேன். இந்த மாதிரி ஒரு ஊழல் கூட்டணி தான் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் கரூரில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. மேலும் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.