Saturday , November 22 2025
Breaking News
Home / செய்திகள் (page 3)

செய்திகள்

All News

தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துக்கள்- எதிர்க்கட்ச்சி தலைவர் திரு.ராகுல் காந்தி

எதிர்க்கட்ச்சி தலைவர் திரு.ராகுல் காந்தி : பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது ஜியு-ஜிட்சு பயிற்சி முகாமில் வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறியது.

இந்த தற்காப்பு கலையின் மூலம் இளைஞர்களின் கவனம், அகிம்சை, சுய பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஆற்றல் ஆகியவற்றை விளக்க முயற்சித்தனர். இளைஞர்களிடையே இருக்கும் இந்த மென்மையான கலைகள் எளிதில் உணர்வுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்திற்கான கருவியாக மாறிவிடும்.

இது தான் விளையாட்டின் அழகு – நீங்கள் எந்த விளையாட்டில் விளையாடினாலும், அது உங்களை உடல் மற்றும் மனரீதியாக வலுவாக்கும்.

அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு : திரண்டு வந்த தமிழர்கள் !

அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு : திரண்டு வந்த தமிழர்கள் !

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.அதன்படி தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரின் விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் அமெரிக்காவின் திமுக அயலக அணியின் சார்பில் நியுயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் (Times Square)ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் திரையிடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது தாய்த்தமிழ் உறவுகள் அளித்த நெகிழ்ச்சியான வரவேற்பு அளித்தனர்”என வீடியோ வெளியிட்டிருந்தார்.

ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் தொடங்கியதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு…

ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் தொடங்கியதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: ‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 ஒதுக்கியுள்ளது. இதை கண்டிக்கும் வகையில் மக்களிடம் பெறப்பட்ட ரூ.1-ஐ சேர்த்து காசோலையாக ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் இன்று (ஆக.28) முதல் தொடங்கியுள்ளது,’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியது: ‘தமிழக ரயில்வே திட்டத்த்துக்கு ரூ.1,000 நிதி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மக்களிடம் கையேந்தி ரூ.1 சேர்த்து காசோலையாக ரூ.1,001-ஐ ரயில்வே துறைக்கு அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். அதன்படி, ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001-ஐ இன்று முதல் தவணையாக அனுப்புகிறோம். இதைத் தொடர்ந்து வட்டாரம், நகரம், பேரூர், கிராமங்களில் இருந்து ரூ.1,001 ரயில்வே துறைக்கு அனுப்பும் போராட்டம் தொடரும்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு துறைகளுக்கு மத்திய அரசு நியாயமாக நிதி வழங்கவில்லை. இப்போது பள்ளிக் கல்வித் திட்டத்துக்கு நிதி வழங்காமல் தமிழக மக்களை மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேர்தல் வரை பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தாத மத்திய அரசு, இப்போது எல்லா துறைகளிலும் விலையை உயர்த்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் 67 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலையில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன. இவற்றில் 5 முதல் 7 சதவீதம் கட்டணம் உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான கோடி செலவில் மத்திய அரசு நிறுவிய சத்ரபதி சிவாஜி சிலையை 6 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த சிலை நொறுங்கி கீழே விழுந்துள்ளது. எல்லாவற்றிலும் ஊழல், மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது, அதானி போன்றோருக்கு கடன் தள்ளுபடி, வரிச்சலுகை என்பன போன்ற செயல்கள்தான் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியின்போதும், கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டன. காந்தி சிலை, நேரு, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி, தமிழன்னை, 133 அடி கொண்ட திருவள்ளுவர் சிலை, கடல் சீற்றம், சுனாமி உள்பட எந்த காலநிலை மாற்றத்தின்போதும் இந்தச் சிலைகளில் சேதம் ஏற்படவில்லை.

கங்கனா ரணாவத் எம்.பி. விவசாயிகளைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியதற்கு உலகளவில் கண்டன குரல்கள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. அது அவரது தனிப்பட்ட உரை என்கிறது பாஜக. விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ள அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

குஜராத் மாநில மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் கண்டுகொள்வதில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்திரா காந்தி பேணிக் காத்தார். அதனை மெருகேற்றினார். தேசத்தின் முகமாக இந்திரா காந்தி இருந்தார். அவர் பற்றி பேச மோடிக்கே தகுதியில்லை. நேற்று முளைத்த காளான் போன்ற அண்ணாமலைக்கும் தகுதி கிடையாது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்திரா காந்தியை இந்த நாட்டின் துர்கா தேவி என பாராட்டினார். இந்திரா காந்தி பற்றி அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்,’ என்று அவர் கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி-யான எச்.வசந்தகுமாரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு செல்வபெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அமரர் ஹெச். வசந்தகுமார் அவர்களின் 4’ஆம் ஆண்டு நினைவு தினம்…

May be an image of 8 people, wedding and dais

சென்னை சத்யமூர்த்தி பவனில் கன்னியாகுமாரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவருமான அமரர் ஹெச். வசந்தகுமார் அவர்களின் 4’ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அலங்காரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் கு.செல்வப்பெருந்தகை அவர்கள்.

“தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன்” – முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.08.2024) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார்.அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், ‘கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான்’ என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ” அன்னை நிலம் பயன் பெறுவதற்கான பயணங்களில் ஒன்றாக, உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன். ஆகஸ்ட் 29 சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு. ஆகஸ்ட் 31 புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சந்திப்பு. செப்டம்பர் 2 சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ பயணம். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன்.’ஃபார்ச்சூன் 500′ நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடவிருக்கிறேன். செப்டம்பர் 7ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு. ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான். முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைப்படாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன்.

ஆட்சிப் பணியும், கட்சிப் பணியும் தொய்வின்றித் தொடர்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினைக் கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கின்ற வகையில், செயலில் வேகம் – சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்திச் செயலாற்றுங்கள். கலைஞரின் தொண்டர்களான உங்கள் மீது உங்களில் ஒருவனான எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன். தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் நியமனம், ஓய்வூதியம் வழங்கும் விவகாரம்; தலைமை செயலர், நிதித்துறை செயலர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்: தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் வழக்கு முடித்து வைப்பு

நீதிபதிகள் நியமனம், ஓய்வூதியம் வழங்கும் விவகாரம்; தலைமை செயலர், நிதித்துறை செயலர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்: தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் வழக்கு முடித்து வைப்பு

புதுடெல்லி: நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகளை நியமனம் செய்வது, ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நீதிபதிகளை நியமனம் செய்வது, சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகள் நியமனம் செய்வது, நீதி துறையில் பணியாற்றுபவர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு விசாரித்து வந்தது.

இந்த விவகாரத்தில் பதிலளிக்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், தமிழ்நாடு உட்பட மொத்த 18 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் நிதி செயலாளர்கள் வரும் 27ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 22ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் நிதி செயலாளர் உதயச்சந்திரன் நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போது அவர்கள தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், ‘இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அதற்கான தொகையை அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதனை நடைமுறைப்படுத்த உள்ளோம். இதுதொடர்பாக விரிவான பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. ஏனெனில், ஏற்கனவே இந்த விவகாரத்தில் உரிய நிதியை ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எனவே அந்த மாநிலத்தின் மீதான நடவடிக்கை கைவிடப்படுகிறது. மேலும் நீதிபதிகள், சட்டத்துறை அதிகாரிகள் தங்களுக்கான பண பலன்களை பெறுவதற்கான பில்களை தயார் செய்து உடனடியாக அரசிடம் வழங்கலாம்.

அடுத்த நான்கு வாரத்தில் உரிய முறையில் பணப் பலன்களை வழங்குவதற்கான பணிகளை அரசு தரப்பில் நடைமுறைபடுத்த வேண்டும். மேலும் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் இனிமேல் ஆஜராக வேண்டாம். அதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீதான நடவடிக்கையும் முடித்து வைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

மருத்துவராகும் மாற்றுத்திறனாளி மாணவர் – நீட் தடையை தாண்டிய கனவை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு!

மருத்துவராகும் மாற்றுத்திறனாளி மாணவர் - நீட் தடையை தாண்டிய கனவை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு!

சிவகங்கை மாவட்டம்: சாக்கோட்டை அருகே கமலை என்ற கிராமம் உள்ளது. இங்கு பெரியசாமி – விஜயா தம்பதி தனது 17 வயது மகன் நாகராஜுடன் வசித்து வருகின்றனர்.

தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளியாக இருக்கின்றனர். மாற்றுத்திறனாளியான நாகராஜ், அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தார்.

பின்னர் அதே பகுதியில் உள்ள பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். எனினும் வறுமை காரணமாக 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 3.5 கி.மீ. நடந்தே பள்ளிக்குச் சென்று படித்து வந்துள்ளார். அதன் பின்னர், அரசு கொடுத்த இலவச சைக்கிள் பேருதுவியாக இருக்க, அதனை வைத்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.

இதனிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைத்து பராமரிப்பு செய்தும், விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டே மேய்த்தும் நாகராஜ் படித்து வந்துள்ளார். இப்படியான சூழ்நிலையில் மருத்துவம் படிக்கும் கனவு இவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், 12-ம் வகுப்போடு சேர்த்து நீட் தேர்வுக்கும் பயிற்சி அளித்தனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 435 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து மருத்துவத்துக்காக நீட் தேர்வுக்காக தீவிரமாக பயிற்சி பெற்று வந்த இவர், அமராவதி புதுார் உழவர் பயிற்சி மையத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த இலவச ‘நீட்’ பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றார்.

இந்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளியான நாகராஜ் 136 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். நீட் தேர்வில் 136 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க நாகராஜுக்கு இடம் கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை… சுக்குநூறாய் விழுந்து சிதறியது!

பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை... சுக்குநூறாய் விழுந்து சிதறியது!

மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 35 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி மன்னரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டது. கடற்படை தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சத்ரபதி சிவாஜி கடற்படையை திறம்பட நிர்வகித்தவர். எனவே கடற்படை தினத்தில் அவரது நினைவை போற்றும் வகையில், இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை மிகவும் கம்பீர தோற்றத்துடன் காட்சி அளித்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிந்துதுர்க்கில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று மதியம் 1 மணியளவில் ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை திடீரென பீடத்தில் இருந்து அடியோடு சரிந்து விழுந்து துண்டு, துண்டாக சிதறியது. சிலை விழுந்ததில் அதன் சுற்றுச்சுவரும் சேதமடைந்தது.

தகவல் அறிந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிலை விழுந்ததற்கான காரணம் குறித்து நிபுணர்கள் விசாரித்து வருகின்றனர். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்த சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பா.ஜனதா மற்றும் ஆளும் கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு! நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு! நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கார் பந்தயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட உள்ள வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.

இதைக் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த மனுவை நாளை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தது.

உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ்…

கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டது. இதன்மூலம் சமூக, பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அதன் அறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு அந்த கணக்கெடுப்பு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் 2021 இல் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2011 இல் எடுத்த சாதி வாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாததற்கு சால்ஜாப்பு காரணங்களைக் கூறி வெளியிட மறுத்து விட்டது. இந்நிலையில் 2021 இல் எடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்கள் நலத் திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் தேவையான ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்கள் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் 1951 இல் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆறு முறை நடத்தப்பட்டு பட்டியலின மக்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அவர்களது உரிமைகளை பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பில், பட்டியலின மக்களுக்கான கணக்கெடுப்போடு, பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்துவதில் எவ்வித சிரமமும் இருக்க முடியாது. ஆனால், அதை செய்வதற்கு ஒன்றிய அரசு முன்வரவில்லை.

ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு நிறைவேற்றிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி பயனாளிகளின் எண்ணிக்கைக்கு உரிய புள்ளி விவரங்கள் இல்லாததால் அதனுடைய பலன் மக்களுக்கு முழுமையாக போய்ச் சேரவில்லை. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்திருந்தால் 10 முதல் 12 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் கூடுதலாக பெறக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டிருக்கிது.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது சாதி வாரி கணக்கெடுப்பும் இணைத்து நடத்த வேண்டும், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு விதித்த 50 சதவிகித வரம்பை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதுபோல, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேசி வருகிறார். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிட பிரதமர் மோடி அரசு தயாராக இல்லை. இதன்மூலம் மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுத்து வருகிற தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இதன்மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை அடைவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராடும். தமிழகத்தில் அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் தீவிரமாக எடுத்து வருகிறார்.

அரசமைப்புச் சட்டப்படி ஒன்றிய பட்டியலில் உறுப்பு 246 இல் ஏழாவது பட்டியலில் 69-வது எண் வரிசையில் உள்ளபடி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிற முழு உரிமையும் ஒன்றிய அரசுக்குத் தான் இருக்கிறது. இந்திய கணக்கெடுப்பு சட்டம் 1948-ன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது ஒன்றிய அரசே தவிர, மாநில அரசு அல்ல. அந்த பொறுப்பை தட்டிக் கழிக்கிற வகையில் மாநில அரசு நடத்த வேண்டுமென்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கோருவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத செயலாகும். பா.ஜ.க.வை காப்பாற்றுகிற முயற்சியாகும். மாநில அரசுகள் புள்ளி விவரங்களைத் தான் சேகரிக்க முடியுமே தவிர, கணக்கெடுப்பு நடத்த முடியாது. ஒன்றிய அரசு நடத்துகிற கணக்கெடுப்பின் மூலம் தான் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.

எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு 2021 இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மூன்றாண்டுகள் காலம் தாழ்த்தி வருகிற நிலையில் உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மோடி அரசை வலியுறுத்துகிறேன்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES