Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 8)

செய்திகள்

All News

‘கலைஞர் நாணயம்” புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரம்! ஒன்றிய அரசுக்கு நன்றி! முதலமைச்சர் ஸ்டாலின் மடல்.!

'கலைஞர் நாணயம்" புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரம்! ஒன்றிய அரசுக்கு நன்றி! முதலமைச்சர் ஸ்டாலின் மடல்.!

சென்னை: எதிர்காலத் தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில்,” நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை என்றென்றும் நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்நாளும் நம் இல்லத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம்.

அரை நூற்றாண்டுகாலம் தி.மு.கழகத்தைக் கட்டிக்காத்து, பேரியக்கமாக வளரச் செய்த தலைவர் கலைஞருக்கு கழகத்தின் சார்பில் தலைமைக் கழகம் தொடங்கிக் கிளைக் கழகங்கள் வரையிலும் கொண்டாட்டம்தான்! ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல திட்டங்களால் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங்கள்தோறும் கொண்டாட்டங்கள்.

இன்னும் கலையுலகினர், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள். வங்கக் கடற்கரையில் தன் அண்ணனின் அருகில், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில், அவரிடம் இரவலாக வாங்கிய இதயத்தை ஒப்படைத்து, ஓய்வெடுக்கும் ஓய்வறியாச் சூரியனாம் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்கு அருங்காட்சியகத்துடனான நினைவிடம் அலைகடலின் தாலாட்டும் இசையின் பின்னணியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் நூற்றாண்டு நூலகம், கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் எனத் தன் வாழ்நாளெல்லாம் தமிழ்மக்கள் பயன்பெறப் பாடுபட்ட தலைவரின் புகழ்போற்றும் வகையில் பயனுள்ள கட்டமைப்புகள் அவருடைய நூற்றாண்டில் உருவாகியுள்ளன. உருவாக்கப்பட்டும் வருகின்றன.

மாவட்டங்கள்தோறும் கழகத்தினர் நிறுவிய சிலைகள், அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் கலைஞர் கோட்டம், கழக அமைப்புகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரசியல் உலகம் இதுவரை காணாத பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் கலைஞரை அவருடைய உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தில் சுமந்து ஒவ்வொரு நாளும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தியாவில் இன்னொரு தலைவருக்கு இந்த அளவில் நூற்றாண்டு விழாவினைத் தங்கள் குடும்ப விழா போலக் கொண்டாடியிருப்பார்களா என்கிற அளவிற்கு நம் உயிர் நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா எத்திசையும் புகழ் மணக்கக் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் மாநில சுயாட்சியின் உரிமைக் குரலாகத் தொடர்ந்து முழங்கியவரும், இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவரும், பல குடியரசுத் தலைவர்களையும் – பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியவருமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஆகஸ்ட் 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிடவிருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எதிலும் உறுப்பினராக இருந்திராத ஓர் அரசியல் தலைவரின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதென்றால் அது நம் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவின்போதுதான். 95 ஆண்டுகால வாழ்க்கையில் 81 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் -நிர்வாகம் – கலை – இலக்கியம் – திரைத்துறை – இதழியல் என பன்முகச் சாதனைகள் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவருடைய திறமை எல்லை கடந்த வரவேற்பைப் பெற்றவை.

அதற்குக் காரணம், தலைவர் கலைஞரின் அத்தனை பங்களிப்புகளிலும் முதன்மை நோக்கமாக இருந்தது தமிழ் – தமிழர் – தமிழ்நாடு இவற்றின் முன்னேற்றம்தான். அதனை அவர் சுயமரியாதை – சமூகநீதி என்ற மனித உரிமைக் கொள்கையின் வழியே நிறைவேற்றிக் காட்டினார். அந்தக் கொள்கையைத் தன்னுள் விதைத்த தலைவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் உருவாக்கிய நினைவுச் சின்னங்கள் வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுச் சிறப்பும் கொண்டவையாகத் திகழ்கின்றன.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் கண்ணீரில் தவிக்கவிட்டு மறைந்த பின், ஓராண்டு கடந்த நிலையில், 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில், அண்ணாவின் நினைவாக ஒன்றிய அரசின் சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. உணர்வுப்பூர்வமான அந்த விழாவில் அப்போதைய ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்களுடனும், ஒன்றிய அமைச்சர் ஷெர் சிங் அவர்களுடனும் முதலமைச்சரான தலைவர் கலைஞர் கலந்துகொண்டார். அண்ணாவின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டபோது, அதனைப் பார்த்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம். அஞ்சல் தலைக்கேற்ற பொருத்தமான முறையில் பேரறிஞர் அண்ணாவின் படத்தைத் தேர்வு செய்து தந்திருந்தவர் தலைவர் கலைஞர். அத்துடன், அந்தப் படத்தின் கீழே ‘அண்ணாதுரை’ என்று அண்ணாவின் கையெழுத்தையும் இடம்பெறச் செய்துவிட்டார் அண்ணாவின் தம்பியான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர். இந்திய அஞ்சல் தலை ஒன்றில் தமிழ் எழுத்துகள் இடம்பெற்ற முதல் அஞ்சல்தலை என்பது பேரறிஞர் அண்ணா நினைவு அஞ்சல் தலைதான்.

அண்ணாவின் நூற்றாண்டு நிறைவின்போதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது முறை பொறுப்பு வகித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று சென்னையில் நம் உயிர்நிகர் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்போயை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சராக இருந்தவரும், பின்னாளில் தலைவர் கலைஞரின் ஆதரவுடன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவருமான மதிப்பிற்குரிய பிரணாப் முகர்ஜி அவர்கள் அண்ணாவின் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

வரலாற்றுச் சிறப்பு மிகுந்த அந்த விழாவில், அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த உங்களில் ஒருவனான நான், அண்ணா நூற்றாண்டு இணையதளத்தைத் தொடங்கிவைத்து, அண்ணாவின் பொன்மொழிகள் நூலினை வெளியிட்டு உரையாற்றுகின்ற நல்வாய்ப்பினைப் பெற்றிருந்தேன்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை போலவே, அவரது நினைவாக வெளியிடப்பட் நாணயத்திலும் ‘அண்ணாதுரை’ என்ற அண்ணாவின் கையெழுத்தை இடம்பெறச் செய்தவர், அண்ணாவின் இலட்சியங்களுக்கு ஆட்சி நிர்வாகத்தின் மூலமாகச் செயல்வடிவம் கொடுத்த அவரது தம்பியான தலைவர் கலைஞர்தான். இந்திய அரசின் நாணயத்தில் தமிழ் எழுத்துகள் முதன்முதலில் இடம்பெற்றதும் அப்போதுதான்.

எழுச்சியும் உணர்ச்சியும் மிகுந்த அந்த விழாவில் நாணயத்தை வெளியிட்ட திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள், நமது பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மாபெரும் ஜனநாயகவாதி. மிகச் சிறந்த பேச்சாளர், தனிப்பெருமை படைத்த நாடாளுமன்றவாதி, மாபெரும் இலக்கியவாதி. ஓர் அரசியல் தலைவர் என்பவர் சமகாலத்திற்கு மட்டுமின்றி, எக்காலத்திற்கும் அரசியலில் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டி இன்றளவும் ஒவ்வொருவரின் போற்றுதலுக்கும் உரியவராகத் திகழ்கிறார்.

அண்ணா காலத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரது உரைகளைக் கேட்பது ஆனந்தமாக இருந்தது. அவர் அவையில் உரை நிகழ்த்தினால் நாடாளுமன்றத்தின் இதர பகுதிகளில் எவரும் இருக்கமாட்டார்கள். மாற்றுக்கட்சி உறுப்பினர்களும், மக்களவையிலிருந்து அமைச்சர்களும் அண்ணாவின் பேச்சைக் கேட்க மாநிலங்களவைக்கு வருவார்கள். அவருடைய பேச்சு அன்றும் இன்றும் இரசித்துப் போற்றப்படுகிறது” என்று புகழாரம் சூட்டினார்.

தலைமையுரையாற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் அண்ணனின் பெருமைகளை இந்திய ஒன்றிய அமைச்சரும், இளைய தலைமுறையினரும் உணர்ந்து கொள்ளும் வகையில் உரை நிகழ்த்தினார். “அண்ணாவின் நாணயம் அரசியலில் எப்படிப்பட்டது என்பதை இங்கே வெளியிட்டிருக்கிறார்கள். அண்ணாவின் நாணயம் எத்தகையது என்பதற்கு அரசியல் வரலாற்றிலே எத்தனையோ கட்டங்கள் உண்டு, எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.

அண்ணாவின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுகிற நேரத்தில் நான் விரும்புவது, மாநில அதிகாரங்களுக்கு வலு சேர்த்து, மாநில மொழிகள் மத்தியிலே உயர வேண்டும். சமநிலையை அடைய வேண்டும்” என்று அந்த விழாவிலும் அண்ணாவின் தம்பியாக மாநில உரிமைக்குரலையும், தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழித் தகுதியையும் கோரினார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.

எந்த இடமாக இருந்தாலும் அங்கே தமிழுக்காக வாதாடியர் நம் தலைவர் கலைஞர். தன் 14 வயதில் தமிழ்க் கொடி ஏந்தி, மொழிப் போர்க்களம் புகுந்த அவர்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழுக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு விழாக்கள், கல்வி நிலையங்களில் பாடச் செய்தார். செம்மொழி மாநாட்டினைச் சிறப்புடன் நடத்தி, அதில் தமிழ் இணைய மாநாட்டிற்கும் உரிய இடமளித்து, இன்று கணினியிலும் கைப்பேசியிலும் எல்லாரும் தமிழைப் பயன்படுத்துவதற்கான ஆக்கமாகவும் ஊக்கமாகவும் திகழ்ந்தார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைத்து வாழும் நம் அன்னைத் தமிழ், காலந்தோறும் வளர்ச்சி பெற்று வென்றிட வேண்டும் என்பதே முத்தமிழறிஞரின் மூச்சாகவும் செயலாகவும் இறுதிவரை இருந்தது.

தமிழாகவே வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்படும் 100 ரூபாய் நாணயத்தில் முத்தமிழறிஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்திலான, ‘தமிழ் வெல்லும்’ என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன. இமயத்தின் உச்சியில் கொடிநாட்டி, தமிழின் பெருமையை உயரச் செய்த சேரன் செங்குட்டுவனை வரலாறு பேசுவது போல, இந்திய அரசு தனது நினைவாக வெளியிடும் நாணயத்தில் தமிழைப் பொறித்து நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் தலைவர் கலைஞர்.

தமிழ்நாட்டின் அரசியலை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் இயக்கிய ஆற்றல் மிக்கவராகவும், இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவம் மிக்க ஆளுமையாவும் திகழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். எதிர்காலத் தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.

இனிமை மிகுந்த தமிழைத் தன் நா நயத்தால், கேட்போர் செவிகளுக்கெல்லாம் விருந்தளித்த தலைவர் கலைஞர், நாணயத்திலும் ‘தமிழ் வெல்லும்’ என்பதை நிறுவியிருக்கிறார். இமயம் போல உயர்ந்து நிற்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில் உடன்பிறப்புகளைக் காண ஆவலாக இருக்கிறேன். இனிய விழா எனினும் எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த உடன்பிறப்புகள் நேரில் காணவும், தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைத்து அகம் மகிழ்கிறேன். தமிழ் வெல்க! தமிழ் போன்ற நம் தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக!” என கூறியுள்ளார்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்

சென்னை: புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று (ஆகஸ்ட் 16) காலை சரியாக 9.17 மணியளவில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதற்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 3 மணியளவில் தொடங்கிய நிலையில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஓஎஸ்-08 எனும் இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ.தொலைவில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் (SiC UVDosimeter) ஆகிய 3 ஆய்வுசாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஒஐஆர் கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவிசெய்யும்.

இதேபோல், ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசிமீட்டர் விண்ணில் யுவி கதிர்வீச்சு அளவைகண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். இது மனிதர்களைவிண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது.

மேலும், எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ளும். இந்த ராக்கெட்டில் ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப்இந்தியா ஸ்டார்அப் நிறுவனம் வடிவமைத்துள்ள 200 கிராம் எடை கொண்ட ‘எஸ்ஆர்-டெமோசாட்’ எனும் நானோ செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (15.8.2024) – 78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, எனது தலைமையில் சென்னை அண்ணா சாலை தர்கா எதிரில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரிய கமிட்டி உறுப்பினரும், ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.ப.சிதம்பரம் எம்.பி., அவர்கள், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு.நாசே ராமசந்திரன் அவர்கள், மாநில துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் எம்.சி., அவர்கள், மகிளா தலைவர் திருமதி ஹசீனா செய்யது அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் கொடியேற்றும் விழாவில்…

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் அரவக்குறிச்சி பகுதியைச் சார்ந்த நான்கு அரசாங்க பள்ளிகளில் கொடியேற்றும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

YouTube player

இதுபோன்ற பொது நல அமைப்புகள் அரசாங்க பள்ளியை நோக்கி சென்று அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் ஊக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும் மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இளைஞர் குரல் சார்பாக அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்களுக்கும் அரசாங்க ஆசிரியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!

May be an image of 9 people and text

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்

எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத்

தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே”

சுதந்திரம் என்பது சமத்துவமெனும் பாரதியின் கனவை நினைவாக்க இந்நன்நாளில் உறுதியேற்போம்.

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!

₹3 லட்சம் மானியம்! 1000 முதல்வர் மருந்தகம்! ரூ.500, ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

₹3 லட்சம் மானியம்! 1000 முதல்வர் மருந்தகம்! ரூ.500, ரூ.1000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சுதந்திர தின உரை விவரம் பின்வருமாறு:

“மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு.மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன்.

முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும். இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும்.2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஓய்வுபெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கட்டபொம்மன், வ.உ.சி., மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10,500 ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

குற்றங்களை தடுக்க கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை: கரூர் புதிய எஸ்பி தகவல்

குற்றங்களை தடுக்க கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை: கரூர் புதிய எஸ்பி தகவல்

கரூர்: கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று (ஆக.

14ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்ட கே.பெரோஸ் கான் அப்துல்லா கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகஸ்ட் 8ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய கி.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே.பெரோஸ் கான் அப்துல்லா கரூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கே.பெரோஸ் கான் அப்துல்லா இன்று (ஆக. 14ம் தேதி) காலை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய கே.பெரோஸ் கான் அப்துல்லா கூறியதாவது: பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படும். குற்றங்களை தடுக்க அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பெருகி வரும் இணைய வழி குற்றங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கணினி வழி குற்றங்கள் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, புகார்கள் மீது முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே நட்புணர்வு பேணப்படும். கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள், சூதாட்டம் தொடர்பான புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி காவல் நிலையங்களை அணுகலாம். காவல் நிலையங்களில் குறைகள் இருந்தால் உயர் அதிகாரிகளை உடனடியாக தொடர்புக் கொள்ளலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 94421 49290 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு பெரோஸ் கான் அப்துல்லா கூறினார்.

78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு ….

Image

ஊடகத்தினருக்கு அழைப்பு 78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் நாளை (15.8.2024) வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை தர்கா எதிரில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு நடைபெறும். அதைத் தொடர்ந்து சேவாதள தலைவர் திரு. குங்பூ எஸ்.எக்ஸ். விஜயன் தலைமையில் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின உரையாற்றுகிறார். இந்நிகழ்வில் நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர் திரு. ப. சிதம்பரம், எம்.பி. அவர்கள் பங்கேற்று சுதந்திர தின சிறப்புரையாற்ற உள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பசுபதி தன்ராஜ் அவர்களின் சமுதாய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருந்தினர் நினைவு பரிசு வழங்கப்படும். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும், காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருதிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (14.8.2024) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சந்தித்து, புதுடில்லியில் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பால் 2022-23-ஆம் பருவத்தில் தேசிய அளவில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கான முதல் பரிசிற்கான விருதினை தர்மபுரி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், தேசிய அளவில் சிறந்த நிதி மேலாண்மைக்குரிய முதல் பரிசிற்கான விருதினை கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் வழங்கப்பட்டதையொட்டி, அவ்விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் செயல்படும் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகளை மேம்படுத்திடவும், கரும்பு விவசாயப் பெருமக்களின் நலன் காக்கவும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் துறை சர்க்கரை ஆலைகள், என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. 2023-24-ஆம் அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் அரவையை மேற்கொண்டுள்ளன.

கரும்பு விவசாயிகள் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கடந்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தி ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கரும்பு விலையை வழங்கிட சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகைக் கடனாக சுமார் 1224.36 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது. 2023-24-ஆம் அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ. 215 /- சிறப்பு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் புதிய கரும்பு இரகங்கள், பருசீவல் நாற்றுகள்,

தோகை தூளாக்குதல், கரும்பு அறுவடை இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கரும்பு அபிவிருத்தப் பணிகளுக்காவும், ஆலைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் சுமார் ரூ.13.27 கோடி நிதியுதவி செய்துள்ளது. நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைமின் உற்பத்தித் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவ்வரசு 1.10.2022 முதல் சுமார் 35 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கி தொழிலாளர்களின் நலன்காக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நலிவடைந்த நிலையிலிருந்த சர்க்கரை ஆலைகள் மீண்டும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

புதுடில்லியில் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைக் கண்டறிந்து விருது வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2022-23-ஆம் பருவத்தில் தேசிய அளவில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையாக தர்மபுரி மாவட்டம், கோபாலபுரத்தில் செயல்படும் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசைப் பெற்றுள்ளது. மேலும், தேசிய அளவில் சிறந்த நிதி மேலாண்மைக்குரிய முதல் பரிசை கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையத்தில் செயல்படும் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக சர்க்கரை ஆலைகள் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்று வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப., சர்க்கரைத்துறை இயக்குநர் த. அன்பழகன், இ.ஆ.ப., சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள்…

Image

இந்திய விடுதலைக்கு காந்தியடிகள் தலைமையில் போராடி, சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் நவீன இந்தியாவை உருவாக்கி பிரதமர் பொறுப்பு வகித்த பண்டித நேரு முதற்கொண்டு தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்திய பெருமை இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால், விடுதலை போராட்டத்தில் கடுகளவு பங்கு வகிக்காத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து மீண்டும் மூன்றாவது முறை அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. மூன்றாவது முறை ஆட்சியமைந்த பா.ஜ.க.விற்கு மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்கள் வாக்களித்து அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவராக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி சார்பாக தலைவர் ராகுல்காந்தி பொறுப்பேற்று இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கிற வகையில் உரிமைக் குரல் எழுப்பி வருகிறார். அவரது பங்களிப்பு இந்திய ஜனநாயகத்தை செழுமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் 78 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், ஜனநாயகத்தையும், தேச ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் கட்டிக் காத்திடவும் சுதந்திர திருநாளில் சூளுரையோற்போம். இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்காமல் முறியடிக்கிற பணியை மிகச் சிறப்பாக செய்கிற வகையில் பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை பாதுகாப்போம். தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES