Saturday , September 27 2025
Breaking News
Home / இந்தியா / 324 இந்தியர்கள் தனி விமானத்தில் நாடு திரும்பினர்: கடும் காய்ச்சல் இருப்பதால் 6 பேரை அனுப்ப சீனா மறுப்பு
MyHoster

324 இந்தியர்கள் தனி விமானத்தில் நாடு திரும்பினர்: கடும் காய்ச்சல் இருப்பதால் 6 பேரை அனுப்ப சீனா மறுப்பு

புதுடெல்லி,

சீனாவில் கொரோனா வைரஸ் பீதியில் சிக்கி தவித்த 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். 330 பேரை அழைத்து வர சென்ற நிலையில் அவர்களில் 6 பேருக்கு கடும் காய்ச்சல் இருப்பதால் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப சீனா மறுத்துவிட்டது.

சீனாவில் கொரோனா என்ற வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நோய் பரவி வருவதால் உலக முழுவதும் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை சீனாவில் 259 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதனால் சீனாவில் வசிக்கும் பிறநாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உலகின் பல நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில் சீனாவில் இருந்து தாயகம் திரும்பும் பயணிகள் அனைவரும் உச்சகட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் வசிக் கும் இந்தியர்களை மீட்பதற் காக, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்டது. அங்கிருந்து 330 இந்தியர்களை விமானத்தில் ஏற்றிவர திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அதில் 6 பேருக்கு கடும் காய்ச்சல் இருந்தது, உகான் விமான நிலைய சோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களை விமானத்தில் செல்ல சீன அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு உகான் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்படும் என்று தெரிகிறது.

இதையடுத்து, 3 சிறுவர்கள், 211 மாணவ-மாணவிகள் உள்பட 324 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு உகானில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம், நேற்று காலை 7.30 மணிக்கு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 22 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

பின்னர் அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் டெல்லியில் உள்ள, இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை மருத்துவ முகாமுக்கும், அரியானாவின் மனேசரில் உள்ள ராணுவ மருத்துவ முகாமுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்த இரு முகாம்களிலும் 324 பேரும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்னொரு சிறப்பு விமானம் டெல்லியில் இருந்து உகான் நகருக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானத்தில் மேலும் 275-க்கும் அதிகமான இந்தியர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். Couresty – daily thanthi

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES