விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் கிராமத்தை சேர்ந்தவர் திரு. வெங்கடாஜலபதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார் . இவர் தமிழர்களின் பாரம்பரியமான கபடி விளையாட்டு மற்றும் தெருக்கூத்து கலைகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர். இந்த நிலையில் தற்போது கொரோனா நோய் தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதையடுத்து தெருக்கூத்து கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால் அவர்களுக்கு உதவும் விதமாக தன்னுடைய தெருக்கூத்து வாட்ஸ் ஆப் குழு நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து இந்த குழுவில் உள்ள வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்த வாட்ஸ் ஆப் நண்பர்கள் தங்களால் இயன்ற பண உதவி அளித்துள்ளனர். இதனையடுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த ரூபாயுடன் தன்னால் முடிந்த பண உதவியையும் சேர்த்து விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 100 க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ. 1500 வீதம் நிவாரண உதவி வழங்கியுள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறுகையில் நம் பாரம்பரிய கலைகளில் ஒன்றானது தான் நம் தெருக்கூத்து இந்த கலை நம் பாரம்பரிய இசை மற்றும் மொழி, போன்றவற்றை பறைசாற்றி பாதுகாக்கிறது. எனவே நமது பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை வளர்த்து வரும் கலைஞர்களுக்கு இந்த தருணத்தில் நம்மால் முடிந்த சிறு உதவிகள் செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
